விழாக்கோலம் பூண்ட மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திருகல்யாணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி சமேத சுந்தரேசுவரர் சுவாமிகள் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருக்கல்யாணம் விருந்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் எழுந்தருளும் விழா வரும் மே 12ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

