இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம் 2025ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் அடிப்படையில், எந்த சாலையிலும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமின்றி சிகிச்சை பெற உரிமை பெற்றுள்ளனர். தேசிய சுகாதார ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பிரதான அமைப்பாக இருக்கும். இது காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என கூறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நடந்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் 1,50,000 ரூபாய் வரை கட்டணமில்லா சிகிச்சையை பெற உரிமை பெற்றுள்ளனர். மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில் இந்த திட்டத்தை மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்துவதற்கான முக்கிய ஏஜென்சியாக இருக்கும். நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சேர்வதற்கான போர்டலை பயன்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கும், நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு சிகிச்சை மற்றும் அதற்கான செலவுகளை தேசிய சுகாதார ஆணையத்துடன் ஒருங்கிணைப்பதற்கும் சாலை பாதுகாப்பு கவுன்சிலே பொறுப்பேர்க்கும். இந்த திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க ஒன்றிய அரசு வழிகாட்டும் குழு ஒன்றை அமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

