18வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24, 25ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1574 வீரர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில்,1165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். முன்பதிவு செய்தவர்களில் 320 பேர் மட்டுமே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானவர்கள். மீதமுள்ள ஆயிரத்து 224 பேர் அன் கேப்ட் வீரர்கள். 30 வீரர்கள் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்களாவர். இந்த ஏலத்தில் 70 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 204 வீரர்கள் மட்டுமே 10 அணிகள் சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2கோடியில், 23 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ரிஷப் பன்ட் கேஎல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிக முக்கிய வீரர்களாக கருதப்படுகிறது. இவர்களை தவிர அஷ்வின், சாஹல், முகமது ஷமி, கலீல் அகமத், தீபக் சாஹர், வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான், இஷான் கிஷான், முகேஷ் குமார், புவனேஸ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, நடராஜன், தேவ்தத் படிக்கல், க்ருனால் பாண்டியா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரிஷப் பன்டை ரூ.30கோடி வரையில் ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதிகபட்சமாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 91பேர் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த29 பேர், ஆஸ்திரேலியா 76, வங்கதேசம் 13, கனடா 4, இங்கிலாந்து 52, அயர்லாந்து 9, இத்தாலி 1, நெதர்லாந்து 12, நியூசிலாந்து 39, ஸ்காட்லாந்து 2, இலங்கை 29, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1, அமெரிக்கா 10, வெஸ்ட் இண்டீஸ் 33, ஜிம்பாப்வே 8 பேர் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சமாக 25 வீரர்களை தங்கள் வசம் வைத்திருக்கலாம். ஏலத்திற்கு முன்பே 10அணிகளும் 46 வீரர்களை தக்க வைத்துள்ளது. மொத்த தொகை ரூ.120கோடியில் அதிகபட்சமாக பஞ்சாப் 110.5 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கிறது. மும்பை ரூ,55, சன்ரைசர்ஸ் 45, ராஜஸ்தான் 41, சிஎஸ்கே 65, ஆர்சிபி 83, கேகேஆர் 51, டெல்லி 73, குஜராத் ரூ.69 கோடியை ஏலத்திற்காக மீதம் வைத்துள்ளன.அண்மையில் ஓய்வு பெற்ற 40வயதை தாண்டிய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ரூ.1.25 கோடி அடிப்படை விலையில் இடம் பெற்றுள்ளார். இந்தியாவின் சர்பராஸ்கான், பிரித்வி ஷா ரூ.75லட்ச பட்டியலில் உள்ளனர்.வெளிநாட்டு வீரர்களில் கடந்த சீசனில் அதிகவிலைக்கு ஏலம் போன ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், கடந்த சீசனில்ஆடாத இங்கிலாந்தின் ஆர்ச்சர், தென்ஆப்ரிக்காவின் ரபாடா, உள்ளிட்டவீரர்கள் அதிகதொகைக்கு ஏலம் போக வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு வெளியே 2வது முறையாக ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.கடந்த முறை துபாயில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

