திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் பங்கேற்க நேற்றிரவு (ஜூலை 13) 10 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் பரிவார மூர்த்திகளுடன் புறப்பட்டனர். இன்று (ஜூலை 14) அதிகாலையில் திருப்பரங்குன்றம் வந்த மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றதை தொடர்ந்து காலை 5.31 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி ஆகிய சன்னதி விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உள்ள 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் 1 கலசம், கணபதி கோயில் 1 கலசம் உள்பட 9 கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்குக்குப் பின் 10 ட்ரோன்கள் மூலம் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்கள் விண்ணை முட்டியது.

