சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் பக்தர்கள் பரவசத்துடன் சரணகோஷம் விண்ணைப் பிளக்க நடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, நேற்று மாலை 6.25-க்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்நிலையில் பக்தர்கள் பரவசத்துடன் காத்திருந்த மகர விளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் இன்று நடந்தது. திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் இருந்து மாலை சன்னதியை வந்தடைந்தது. அது ஐயப்பனுக்குப் பொருத்தப்பட்டவுடன், ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் ‘சரணம் ஐயப்பா’ கோஷம் விண்ணை முழங்க நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஏற்பட்ட மகரஜோதி தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க கண்டுகளித்தனர்.
மகரஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். அவர்கள் தரிசனத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, வரும் 18-ம் தேதி வரை திருவாபரணத்துடன் ஐயப்பனை தரிசிக்கலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 19-ஆம் தேதி சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 20-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நிறைவடைகிறது.
