மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை சுமார் 7.30 மணியளவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ராஜகோபுரங்கள், அம்மன் மற்றும் சுவாமி தங்க விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களுக்கு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று, கோயிலின் மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் சுவாமிக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததுடன், வேத மந்திரங்கள் முழங்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழா என்பதால் மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.

