மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் ஐந்தாவதாக நாடாக மாறியுள்ளதாகவும், மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் மாநிலத்திற்கு கிடைத்த வருவாயின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று உ.பி. சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினர் ராகிணி சோங்கரின் கேள்விக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறாக பதிலளித்தார். அவர் உரையில் கூறியதாவது, “எதிர்க்கட்சி தலைவர்கள் இந்தியா ஒருபோதும் வளர்ந்த நாடாக மாற முடியாது எனக் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியா தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. 2027-ம் ஆண்டில், இந்தியா மேலும் உயர்ந்த நிலைக்கு செல்லும் என்பது உறுதி. இதற்காக 140 கோடி இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம், ஏனெனில் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ” என உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

