விருதுநகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
நீட் தேர்வு என்ற ஒரு நுழைவு தேர்வு மருத்துவத்துறையில் வந்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளும் அது பற்றி இருந்து வருகின்றன. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை இந்த நீட் தேர்வு வெகுவாக பாதிப்பதாக பேசப்படுகிறது. காரணம் நகர்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் போல கிராமப்புற மாணவர்களால் நீட் கோச்சிங் சென்டர்களுக்கு சென்று பணம் கட்டி படிக்க முடியாது என்பது தான்.
இந்த நிலையை மாற்றி கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் என முடிவு செய்த விருதுநகரை சேர்ந்த ஏஎன்டி அறக்கட்டளையினர் தற்போது கிராமப்புறங்களில் நீட் புத்தகங்கள் கொண்ட நீட் நூலகம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதன் முதல் படியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் மாணவர்களுக்கு நீட் புத்தகங்கள் வழங்கி அந்த கிராமத்திலேயே சிறிய நூலகம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதுபற்றி அந்த கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் எனும் மாணவன் பேசும் போது, எங்களை போன்ற கிராமப்புற மாணவர்கள் பணம் கட்டி நீட் கோச்சிங் சேரவும் முடியாது. பணம் கட்டி நீட் புத்தகங்கள் வாங்கவும் முடியாது, அப்படி இருக்கையில் நீட் நூலகம் வருவது என்னை போன்ற பல கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் உதவியாக இது இருக்கும்” என்றார்.

