இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் போர்த் திறனை மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை மேம்படுத்தும் நோக்கில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஆயுதப் படைகளுக்கு தேவையான போர்க் கருவிகள் மற்றும் திறனை மேம்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரபேல் விமானங்களை நேரடியாக வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ரபேல் விமானங்கள், உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் இருந்து இயக்கப்படும். பிரான்ஸுடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் ரூ.38,000 கோடியில் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிரான்ஸிடமிருந்து மேலும் 3 ஸ்கார்பீன் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளது. மும்பையைச் சேர்ந்த மசகான் டாக்ஸில் இந்த கப்பல்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த மூன்று புதிய கப்பல்களை 2031-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு, பாதுகாப்பு தொடர்பான பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு (சிசிஎஸ்) இம்மாத இறுதிக்குள் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஸ்கார்பீன் ஒப்பந்தத்திற்கும் விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.

