எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தியான்ஜின் நகரில் உள்ள பின்ஹாய் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன உயர் அதிகாரிகளும் இந்திய உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். எஸ்சிஓ அமைப்பில் பெலாரஸ், சீனா, ஈரான், இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மேலும் பல நாடுகள் பார்வையாளர்களாகவும், பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளாகவும் இதில் பங்கேற்கின்றன. 2005 முதல் பார்வையாளராக இருந்த இந்தியா, 2017ல் உறுப்பு நாடாக மாறியது.எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தனது சீன பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கி உள்ளேன். SCO உச்சிமாநாட்டின் கலந்துரையாடல்களையும் பல்வேறு உலகத் தலைவர்களுடனான சந்திப்பையும் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

