இந்தோ – திபெத் எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் சாலை பணியில் ஈடுபட்ட 57 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தோ – திபெத் எல்லை போலீசார்களும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகண்ட் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறை மற்றும் பிற துறைகளின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பேரிடர் மேலாண்மைத் துறை உட்பட அனைத்து நிர்வாகமும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன. “சிக்கியுள்ள நபர்களை விரைவில் பாதுகாப்பாக மீட்க முயற்சித்து வருகிறோம்” என்றார். சண்டிகரில் உள்ள பாதுகாப்புத் துறையின் புவி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியிட்ட எச்சரிக்கையில், சாமோலி, உத்தர்காசி, ருத்ரபிரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் 2,400 மீட்டருக்கு மேல் உயரத்தில் 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

