சீனாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற உலக ஹுமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தில் சீனாவின் அபார வளர்ச்சியை உலகிற்கு எடுத்துக்காட்டின. இந்தப் போட்டியில் 16 நாடுகளிலிருந்து 280 அணிகள் பங்கேற்றன.இந்த நிகழ்வில் தடகளம், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுடன், மருந்துகளைப் பிரித்தெடுத்தல், பொருட்களைக் கையாளுதல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற ரோபோக்களுக்கான சவால்களும் நடத்தப்பட்டன. அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகளிலிருந்தும், சீனாவின் யூனிட்ரீ மற்றும் ஃபூரியர் இன்டலிஜென்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்தும் அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த ‘ரோபோ ஒலிம்பிக்ஸ்’ போட்டிக்கு 128 முதல் 580 யுவான் (சுமார் ₹1,500 முதல் ₹6,700) வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கால்பந்து போட்டிகளின்போது ரோபோக்கள் ஒன்றோடு ஒன்று மோதி விழுந்தன. 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின்போது, ஒரு ரோபோ ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழுந்தது. இதுபோன்ற ரோபோக்களின் தடுமாற்றங்கள் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுத்தன. இந்த போட்டிகள், ரோபோக்களை தொழிற்சாலை வேலைகளுக்குத் தயார் செய்யத் தேவையான தரவுகளைச் சேகரிக்க உதவுகின்றன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

