உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக ஜெர்மனியின் பெர்லின் நகரில் முக்கிய உச்சி மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்குப் பிறகு பேசிய டிரம்ப், “உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் நல்ல பேச்சுவார்த்தை நடந்தது. போரை நிறுத்தும் ஒப்பந்தம் இப்போது மிகவும் சாத்தியமாகியுள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமான மாற்றமாக, உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான தனது நீண்டகால கோரிக்கையை அதிபர் ஜெலன்ஸ்கி முதல் முறையாக கைவிட ஒப்புக் கொண்டுள்ளார். இதற்குப் பதிலாக, உக்ரைன் மீது எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அனைத்து நாடுகள்மீதும் தாக்குதல் என கருதப்படும் வகையில் சட்டபூர்வமான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரும் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

