மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம். தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம் . குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் பொங்கல், 2ம் நாள் மாட்டுப் பொங்கல் 3ம் நாள் காணும் பொங்கல் என மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை 1ம் தேதி பொங்கல் பண்டிகையைத் தவிர, சபரிமலை ஐயப்பன் கோயில், பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் மகர ஜோதி தரிசனம் மிகவும் விசேஷ நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை 1ம் தேதி (ஜனவரி 14) அதாவது மகர சங்கராந்தி எனக்கூறப்படும் நாளன்று, கேரளாவில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படும் மகர ஜோதியைப் பார்க்க ஐயப்ப பக்தர்கள் குவிவது வழக்கம்.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து இரவு நடை சாத்தப்பட்டது. மகரஜோதி பூஜைக்காக டிசம்பர் 30-ம் மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 40 நாட்களில் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வழிபாடு புதன்கிழமை காலை நடைபெற்றது. கலசாபிஷேகம், களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், சுவாமிக்கு 450 பவுன் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மங்கல இசை முழங்க தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு பூஜைக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் நடை சாத்தப்பட்டது.
இதையடுத்து, மகரவிளக்கு பூஜைக்காக இம்மாதம் 30-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. ஜன.15-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
ஜன.21-ம் தேதி பந்தளராஜ குடும்பத்தினரின் தரிசனத்துக்குப் பிறகு நடை சாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

