பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் நிலையங்களில் புதிய சார்ஜிங் மையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 9 இடங்களை சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடங்கள்:- 1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில் பார்க்கிங், 2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், 3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங், 4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங், 5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம், 6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு, 7) மெரினா கடற்கரை பார்க்கிங், 8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா, 9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா. இதன் சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து 2 வாரங்களில் டெண்டர் கோரப்பட்டு, விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

