வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில், நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் நிலவுவதால், வட மாநிலங்களில் கடுமையான குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதன் விளைவாக, டெல்லியில் இன்று 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இன்று காலை, டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், அடர்ந்த மூடுபனி காரணமாக விமான புறப்பாடுகள் தாமதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சுமார் 41 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் எனவும், இன்று காலை 6 மணிக்கு டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 408 ஆக பதிவானது, இது மத்திய மாசுக்கான அளவாகக் கருதப்படுகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தகவலின்படி, மாசு நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்து கடுமையான நிலைக்கு மாறியுள்ளது. மேலும், டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் 6 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அடர்ந்த மூடுபனி காரணமாக, நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து மற்றும் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.