உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்துடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். உலக அளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், 45 கோடியேற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழலில், நேற்று நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் கவுதம் அதானி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தார். மேலும், அவர் இஸ்கான் கோயிலுக்கு சென்று மகாபிரசாதம் தயாரிக்க உதவினார். பின்னர், அதானி குழுமம் மற்றும் இஸ்கான் கோயிலின் சேவகர்கள் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதுகுறித்து அதானி எக்ஸ் வலைத்தளத்தில் கூறியதாவது, “மகா கும்பமேளா இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கையின் மிகப்பெரிய யாகம். இதில் கலந்து கொண்டது அளவில்லா ஆனந்தம்” என பதிவிட்டுள்ளார்.
