சீனாவின் உள்மங்கோலியா பகுதியில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சீனாவில் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் பையுன் ஓபா பகுதியில் அரிய வகை தாதுக்கள் காணப்படுகின்றன. தற்போது, அப்பகுதியில் 5 மிகப்பெரிய சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன, அவற்றில் இருந்து இரும்பு உட்பட 175 வகையான தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.அங்கு தோரியம் இருப்பு குறித்து சீன விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவு அரசுக்கு விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பையுன் ஓபா பகுதியில் சுமார் 10 லட்சம் டன் தோரியம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உருவாக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சர்வதேச அணு சக்தி விஞ்ஞானிகள் மேலும் கூறியதாவது, அணு மின் உற்பத்தியில் யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் தாதுக்களுக்கு அடுத்ததாக தோரியம் முக்கிய பங்கு வகிக்கிறது . தோரியத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அணு மின் உற்பத்தியின்போது சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படாது.மின் உற்பத்தி செலவு குறையும்.சீனாவின் கோபி பாலைவனம் பகுதியில் தோரியம் அடிப்படையிலான அணு மின் நிலையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அணு மின் நிலையம் 2029-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப, பல்வேறு பகுதிகளில் தோரியம் அடிப்படையிலான அணு மின் நிலையங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. யுரேனியத்துடன் ஒப்பிடும் போது, தோரியத்தில் இருந்து 200 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
