திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு புதிய முறையை செயல்படுத்த உள்ளது. அதில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் டிஜிட்டல் முறையில் லட்டுகளைப் பெறலாம். இந்த புதிய முறையில், பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண்ணை அதற்கென வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான லட்டுகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, யூ.பி.ஐ. அல்லது பிற டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தி லட்டுக்கான டிக்கெட்டை பெறலாம். தற்போது, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கியின் கீழ் லட்டு கவுண்டரில் 5 இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளன. எம்.பி.சி. விசாரணை மையத்தில் மேலும் 3 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் மேலும் சி.ஆர்.ஓ. அலுவலகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை மற்றும் விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களிலும் இத்திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

