அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டிரம்ப் உடன் உரையாடினார். ஆனால், அந்த உரையாடல் வாக்குவாதமாக மாறியதால், ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு வந்தார்.இந்த நிகழ்வு உலக அரசியலில் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், அமைதிக்கான நல்லிணக்க உறுதிப்பாட்டை உக்ரைன் வெளிப்படுத்தும் வரை, தற்போது வழங்கப்படும் அனைத்து வகையான ராணுவ உதவிகளும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு செல்லாத அமெரிக்க ராணுவ உபகரணங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள், கப்பல் வழி போக்குவரத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் போலாந்தில் காத்திருக்கும் ஆயுதங்களும் இதற்குள் அடங்கும்.மார்கோ ரூபியோ, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர், கடந்த ஜனவரி மாதத்தில் இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு வழங்கப்படும் வெளிநாட்டு உதவி மானியங்களை தவிர, 90 நாட்களுக்கு வெளிநாட்டு உதவி மானியங்களை நிறுத்துவதாக அறிவித்தார்.

