பாடகர் ஷங்கர் மகாதேவன் அங்கம் வகிக்கும் சக்தி இசைக்குழுவிற்கு சிறந்த இசை ஆல்பத்திற்கான கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
66ஆவது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது. இசை, ராக், பாப் நடனம் என 94 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், இந்தியாவின் சக்தி இசைக் குழுவின் ’This Moment’ என்ற ஆல்பத்திற்கு, சிறந்த ஆல்பத்திற்கான விருது வழங்கப்பட்டது. பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன், தபேலா கலைஞர் ஜாகீர் உசேன், கிதார் இசைக்கலைஞர் ஜான் மெக்லாக்லின், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன், தமிழ்நாட்டை சேர்ந்த தாள கலைஞர் செல்வகணேஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஷங்கர் மகாதேவன், ஜாகீர் உசேன் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் கிராமி விருதை பெற்றுக்கொண்டனர்.
அப்போது பேசிய ஷங்கர் மகாதேவன், கடவுள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவை நினைத்து பெருமை கொள்வதாகவும், தனது மனைவிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புவதாகவும் ஷங்கர் மகாதேவன் கூறினார்.
,

