தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 2,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்புகள் என நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் தினத்தன்று மாலை, பால், தயிர் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, மாட்டு பொங்கலன்று பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது மற்றும் உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு காய்கறி, ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், பல்வேறு வகையான பதார்த்தங்களாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு 2,000 கிலோ அளவிலான பொருள்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும், நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.