கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களுக்கு 4கிராம் தங்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அரசியல் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு திருமண தகவல் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி, கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், அத்திருமணங்களுக்கு 4 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும் என தெரிவித்த அவர், திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்படும் எனக்கூறினார்.
ஒரு கால பூசைத் திட்டம் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவர்களது குழந்தைகளில், ஆண்டுதோறும் 400 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதே போன்று நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித்தேர் அமைக்கப்படும், என்றும், சுவாமிமலை முருகன் கோயிலில் மின்தூக்கி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில், மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாட சிறப்பு நடைபாதை அமைக்கப்படும் என அறிவித்த அமைச்சர் , ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 50 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 3 நாள் தைப்பூச விழாவிற்கு வருகை தரும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *