தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகள் முன்னேறிய நிலையில், விமான நிலையம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அப்பகுதியின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என போராடும் மக்களை சந்திக்க தவெக தலைவர் செல்ல திட்டமிட்டிருந்தார். விஜய் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில், போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும் அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜனவரி 20ம் தேதி, திங்கட்கிழமை, பரந்தூர் செல்லவுள்ள விஜய், அங்கு போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு வழங்க திட்டமிட்டுள்ளார். த.வெ.க கட்சியின் தொடக்கத்திற்குப் பிறகு, விஜய் முதன்முறையாக போராட்டத்திற்காக களத்தில் இறங்குகிறார். மக்களை சந்திக்க அவர் ஏகனாபுரம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அடிப்படையில், அந்த இடத்தை த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

