உலகின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவுபெற்றது. 45 நாட்களில் 66 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகைள், பல்துறை வல்லுநர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். திரிவேணி சங்கமத்தில் நீராட, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்த நிலையில், பிரயாக்ராஜ் நகருக்கான விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. ரயில்களில் ஏசி பெட்டிகளில் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. மகா கும்பமேளாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு சாதனை செய்திருப்பதாக ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.24 கோடி பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரயக்ராஜ் கும்பமேளாவிற்கு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

