பழனியில் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் 100 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டிற்கான கொடி பறக்கவிடப்பட்டது. மஞ்சள் நிறத்திலான கொடியில் முருகன் முத்தமிழ் மாநாடு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆதீனங்கள், இங்கிலாந்து, இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் என விவிஐபிக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ‘தமிழ்க்கடவுள் முருகனின்’ சிறப்பை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கில் முருகன் வழிபாட்டு சிறப்புகள், இலக்கிய சிறப்புகள் குறித்து சுமார் 1,300 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
அரங்கங்களின் முன்பு ‘மலைபோன்ற செட்’ அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செட்டின் மேற்பகுதியில் முருகன், சிவன்-பார்வதி இருப்பது போன்ற நுழைவு வாயில் உள்ளது. இதன் அருகிலேயே, 100 அடி உயரத்தில் மாநாட்டு கொடி ஏற்றப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியினை ஏற்றி வைத்தார். மாநாட்டுக்கு வரும் பங்கேற்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு தனித்தனியாக அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.
மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு முருகனின் ராஜஅலங்கார படம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், கந்தசஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு உள்ளிட்டவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்படுகின்றன

