108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தரிசனம் செய்து வந்தனர் அந்த வகையில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே 3.45 மணி அளவில் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ராஜநடையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.
ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர். காந்தி சாலையில் புறப்பட்டு காமராஜர் தெரு 4 ராஜ வீதி சுற்றி மீண்டும் நிலைக்கு வந்து சேரும். மேலும் தேர் திருவிழாவை முன்னிட்டு மிலிட்டரி ரோடு புதிய ரயில்வே நிலையம் பழைய ரயில்வே நிலையம் பெரியார் நகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக நான்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
