ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள், போட்டிக்கான தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் கூறியதாவது: மார்ச் 23 அன்று சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. போட்டியை காண வருபவர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்பான்சர் செய்யப்பட்ட போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், போட்டியை காண்பதற்கான டிக்கெட் உட்பட, பயணச்சீட்டில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்க முடியும். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தப்படலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கிடையில் பயணம் செய்ய எந்தவித கட்டணமும் தேவையில்லை. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் நோக்கி புறப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

